இம்பால்: மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் மேதே மற்றும் குக்கி சமூகத்தினர் நேற்று மீண்டும் மோதிக்கொண்டனர். அவர்கள் உள்ளூர் சந்தையில் ஏற்பட்ட இடப்பிரச்சினையே அவர்கள் மோதிக்கொண்டதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
மணிப்பூரில் 64 விழுக்காட்டினர் வசிக்கும் மேதேயி சமுதாய மக்கள் மலைப் பகுதிகளில் நிலம் வாங்க அனுமதி இல்லை.
மலைப் பகுதிகளில் குக்கி இனப் பழங்குடியினர் வசிக்கின்றனர்.
இந்நிலையில் மேதேயி சமுதாய மக்கள் தங்களுக்குப் பழங்குடியினர் தகுதி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குக்கி பழங்குடியினர் மணிப்பூரின் பல பகுதிகளில் கடந்த மே 3ஆம் தேதி ஒற்றுமை பேரணி நடத்தினர்.
இந்தப் பேரணியில் மேதேயி மற்றும் குக்கி பழங்குடியினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
அந்த மோதலின்போது ஏராளமான வீடுகளும், கடைகளும் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இந்த கலவரத்தில் எழுபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஏராளமானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றனர்.
இந்த கலவரம் ஓய்ந்து மணிப்பூரில் இயல்புநிலை திரும்பிய நிலையில், தலைநகர் இம்பாலில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
நியூசெக்கான் என்ற இடத்தில் உள்ள சந்தையில் இடப்பிரச்சினை காரணமாக இந்த மோதல் ஏற்பட்டது. கலவரத்தைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் ராணுவத்தினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர். அங்கு மீண்டும் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிழக்கு இம்பால் மாவட்டத்தில் ஆயுதங்களுடன் சுற்றிய கும்பல் 2 வீடுகளுக்கு தீவைத்தது. மேலும், கடைகளை அடைக்குமாறு மிரட்டியதால் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கு வந்த ராணுவத்தினா், கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசி, கும்பலை விரட்டியடித்தனா்.
இந்த நடவடிக்கையின்போது சிலா் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயுதமேந்திய கும்பலில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
கிழக்கு இம்பால் மாவட்டத்தில் ஊரடங்கு தளா்த்தப்பட்டிருந்த நிலையில், அது மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

