திருவனந்தபுரம்: பெண் நீதிபதிகளுக்கான ஆடை விதிமுறையில் 53 ஆண்டு காலமாக எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே தற்போது நாங்கள் அணிந்துவரும் ஆடையில் மாற்றம் தேவை என்று கேரள நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கேரள உயர் நீதிமன்றம் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. இப்போதுள்ள நீதிபதிகளுக்கான ஆடை விதிமுறையில், பெண் நீதிபதிகள் சேலை, வெள்ளை கழுத்துப்பட்டை, கறுப்புநிற மேலங்கி அணிய வேண்டியிருக்கிறது. இது கோடை காலத்தில் மிகவும் சிரமமாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கேரள நீதிமன்ற பெண் நீதிபதிகள் சுமார் 100 பேர் கேரள நீதிமன்றப் பதிவாளரிடம் ஆடை மாற்றம் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
நீதிமன்றப் பணியின்போது சுடிதார் அணிய அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். தெலுங்கானா உயர் நீதிமன்றம் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்த சுற்றறிக்கையில், பெண் நீதிபதிகள் பணியின்போது வழக்கமான சேலையுடன், சல்வார், சுடிதார், நீளமான பாவாடை, பேண்ட் அணியலாம். அவை வெள்ளை, வெளிர் மஞ்சள், சாம்பல், கறுப்பு வண்ணத்திலோ, அவற்றின் கலவையிலோ இருக்கலாம் என தெரிவித்திருந்தது.

