பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் பல மாவட்டங்களில் பருவமழை காலத்திற்கு முன்கூட்டியே மழை பெய்யத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் பெங்களூர் மற்றும் பழைய மைசூர் ஆகிய நகரங்களில் கடந்த நான்கு நாள்களாக கனமழை பெய்து வருகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் சாலைகளும், சுரங்கப் பாதைகளும் மழை நீரில் மூழ்கி சாலைப் போக்குவரத்து முடங்கியது. சில இடங்களில் வாகனங்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன்பு கே.ஆர்.சர்க்கிள் பகுதியில் உள்ள சுரங்கப்பாதை மழை நீரால் நிரம்பியிருந்தது. அந்த நீரில் மூழ்கி இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
பெங்களூரு மட்டுமல்லாமல் பழைய மைசூர் பகுதியிலும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மழையுடன் சேர்ந்து சூறைக்காற்றும் வீசுவதால் சாலை ஓரங்களில் உள்ள ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பல இடங்களில் மின் கம்பங்களும் சேதம் அடைந்ததால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூரு மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் சில இடங்களில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழையும் கொட்டியது.
பழைய மைசூரு பகுதியும் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மழைப் பாதிப்பில் இருந்து பெங்களூரு மக்களை மீட்பதற்காகவும் சேதமடைந்த சாலைகளைச் சரிசெய்யவும் போர்க்கால நடவடிக்கைகளைத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். மேலும், மழை வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்பதற்கும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்வதற்கும் 60க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு நிலையங்களைத் திறக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கட்டுப்பாட்டு நிலையங்கள் அமைக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். ஜூன் 1-ஆம் தேதிக்குள் அவை செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூருவின் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான சிலிக்கான் சிட்டி பகுதியில் 4 அடி ஆழ பள்ளம் உருவானது. இது கடந்த 15 நாள்களில் உருவாகும் மூன்றாவது பள்ளமாகும்.
கனமழை காரணமாக கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 56 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

