திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கொல்லத்தை அடுத்துள்ள கொட்டாரக்கரா அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் வந்தனாவை, சிகிச்சைக்கு வந்த விசாரணைக் கைதி கொடூரமாக குத்தி கொலை செய்தார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தியதால் அரசு மருத்துவர்கள், மருத்துவமனைத் தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதிய அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுப்படி இந்தச் சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நேற்று முன்தினம் அவர் ஒப்புதல் அளித்தார்.
இந்த சட்டம் அமலுக்கு வந்த நாளிலேயே கேரளாவில் மீண்டும் மருத்துவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நரம்பியல் துறைக்கு சுதீர் என்ற வாலிபர் சிகிச்சைக்குச் சென்றார்.
ஆனால் அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என புகார் கூறிய சுதீர் திடீரென அங்கிருந்த இரு மருத்துவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மருத்துவர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவத்தை விசாரித்து வருகின்றனர்.