புதுடெல்லி: கர்நாடகாவில் நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
யாருக்கு எந்தெந்த அமைச்சுகளைக் கொடுப்பது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் காங்கிரசின் தேசிய தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்த நேற்று இந்தியத் தலைநகர் டெல்லிக்குச் சென்றனர்.
அங்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் யாருக்கு என்ன துறை வழங்குவது என்பது குறித்து இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இவர்கள் 24 பேரும் நாளை அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்.
இதை முன்னிட்டு, டெல்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரைச் சந்தித்துப் பேசியது குறித்து முதல்வர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே உள்பட 24 பேர் அமைச்சர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.
முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் கடந்த 20ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.
இதையடுத்து, கடந்த மே23 ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் 5 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட யு.டி. காதர், கடந்த 24ஆம் தேதி சபாநாயகராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

