காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள தாஹோத் மாவட்டத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் மிகவும் குறைந்த அளவிலேயே தேர்ச்சி அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிலும், இங்குள்ள 157 பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.
இம்மாநிலத்தின் தாய்மொழியான குஜராத்தியில் 96,000 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குஜராத்தில் வெளியான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் ஒட்டுமொத்தமாக 64.62 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில் அதிகபட்சமாக 76 விழுக்காட்டினரும் மிகக்குறைந்த அளவில் தாஹோத் மாவட்டத்தில் 40 விழுக்காடு மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
272 பள்ளிகளில் 100 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1,084 பள்ளிகளில் 30 விழுக்காட்டுக்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பதிவாகி இருக்கிறது.
இதில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விதமாக 157 பள்ளி மாணவர்களில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை. மறு தேர்வுக்கு விண்ணப்பித்த 165,690 மாணவர்களில் 27,446 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநிலத்தின் தாய் மொழியான குஜராத்தி பாடத்தில் 96,000 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதேபோல் கணிதப் பாடத்தில் 196,000 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. வழக்கம் போல் மாணவர்களைவிட மாணவிகளே அங்கு அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

