புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.
பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை.
தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டும், அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் கடந்த 28ஆம் தேதி நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்புவிழா நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அக்கட்டடத்தை நோக்கிப் பேரணி வகுத்துச்சென்றனர். அப்போது தடுத்துநிறுத்திய காவல்துறையினருக்கும் மல்யுத்த வீரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து மல்யுத்த வீரர்களை அவர்கள் கைதுசெய்தனர்.
ஒலிம்பிக் விளையாட்டில் நாட்டிற்காகப் பதக்கங்கள் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. டெல்லி முழுவதும் 700 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
இந்நிலையில் மல்யுத்த வீரர்கள் உருக்கமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். "நாட்டுக்காக நாங்கள் அரும்பாடுபட்டு வென்று வந்த பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போகிறோம்," என்பதுதான் அந்த அறிவிப்பு. ஹரித்வாருக்கு பேரணியாகச் சென்று மாலை 6 மணிக்கு நதியில் பதக்கங்களை வீசி எறியப்போகிறோம் என்று கூறினர். மேலும் இந்தியா கேட்டில் உண்ணாவிரதம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தனர்.
"ஜந்தர் மந்தரில் 38 நாட்கள் போராட்டம் நடத்திய அவர்கள், 28ஆம் தேதி சட்டத்தை மீறிவிட்டனர். எனவே அவர்களை அப்புறப்படுத்த வேண்டியதாகி விட்டது. இனி அவர்கள் ஜந்தர் மந்தரில் போராடுவதற்கு அனுமதி இல்லை," என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்களால் அமைக்கப்பட்ட கொட்டகைகள் அனைத்தும் அகற்றப்பட்டன.
இந்நிலையில், முன்னாள் அரசாங்க ஊழியர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் என 1,150க்கு மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் ஒன்றிணைந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதாவது, பிரிஜ்பூஷண் ஷரன் சிங் கைதுசெய்யப்படவேண்டும். போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும், அநீதிக்கு எதிராக குரல்கொடுப்பது மக்களின் உரிமை. அதற்கு அரசாங்கம் மதிப்பளிக்கவேண்டும் என்று அவர்கள் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

