ஒன்பது ஆண்டுகள் நிறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி
புதுடெல்லி: "இந்திய மக்கள் அனைவரது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும். இந்த விருப்பத்தை முன்னிலைப்படுத்தியே எனது நடவடிக்கைகளும் அதுசார்ந்த முடிவுகளும் வழிநடத்தப்படுகின்றன," என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மோடி பிரதமராகப் பதவியேற்று இன்றுடன் (மே 30) 9 ஆண்டுகள் நிறைவடைவதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"இந்த நாட்டுக்கு சேவையாற்றும் பணியில் ஈடுபட்டு ஒன்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளோம். அந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவும் அது சார்ந்த நடவடிக்கையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டவையே. வளர்ந்த நாடாக இந்தியாவை உருவாக்க நாம் மேலும் கடுமையாக உழைக்கவேண்டும்," எனக் கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டுகள் ஆட்சி நிறைவை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் செவ்வாய்க்கிழமையில் இருந்து ஒரு மாதம் நீண்ட பிரசாரமாக கொண்டாட அக்கட்சி முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடி புதன்கிழமை ராஜஸ்தானில் நடைபெற உள்ள பேரணியில் கலந்துகொள்ள இருக்கிறார். 'தேசமே பிரதானம்'என்ற தாரக மந்திரத்துடன் அனைத்துத் துறைகளிலும் இதுவரை இல்லாத அளவிற்கு நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது என்று அக்கட்சியின் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள், மாநில முதல்வர்கள் நாடு தழுவிய அளவில் அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து திங்கள்கிழமை அவர்கள் எடுத்துரைத்தனர்.
நரேந்திர மோடி, முதல் முறையாக 2014ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.
2019ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி இரண்டாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார்.

