மும்பை: சிவசேனா கட்சியில் இருந்து வெளியேற 22 சட்டமன்ற உறுப்பினர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியேறக்கூடும் என்று உத்தவ் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் விநாயக் ராவத் (படம்) கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று உள்ள போதும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியை பாரதிய ஜனதா கட்சி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக அந்த கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜனன் கிரித்திகர் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் அதிருப்தியில் உள்ள 22 சட்டமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து வெளியேற தயாராக இருக்கின்றனர்.
அதேபோல் அக்கட்சியில் இருக்கும் பதின்மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒன்பது பேர் உத்தவ் தாக்கரே சிவசேனாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் அந்தக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் விநாயக் ராவத் தெரிவித்துள்ளார்.
"மாநில அமைச்சர் சம்புராஜி தேசாய், கட்சி மீதான அதிருப்தி குறித்து 15 நாள்களுக்கு முன் உத்தவ் தாக்கரேக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பி உள்ளார்," என கூறியுள்ளார்.
உத்தவ் தாக்கரேக்கு குறுந்தகவல் அனுப்பியதாகக் கூறப்படும் தகவலை அமைச்சர் சம்புராஜி தேசாய் மறுத்து உள்ளார்.
மேலும் தவறான தகவலை கூறியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் விநாயக் ராவத் மன்னிப்புக் கேட்க வேண்டும் அல்லது அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

