இந்தியா, நேப்பாளம் இடையே ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்து
புதுடெல்லி: இந்தியா, நேப்பாளம் இடையேயான உறவை இமாலய உயரத்துக்கு எடுத்துச்செல்வதற்கு இரு நாடுகளும் தொடர்ந்து பாடுபடும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதே உணர்வுடன் செயல்பட்டு எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களுக்கும் உரிய தீர்வு காணப்படும் என அவர் குறிப்பிட்டார்.
"கலாசார, ஆன்மிக உறவுகளை மேலும் பலப்படுத்தும் விதத்தில், நானும் நேப்பாள பிரதமர் பிரசண்டாவும் பல்வேறு திட்டங்களை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளோம்," என்றார் பிரதமர் மோடி.
நேப்பாள பிரதமர் புஷ்பகமல் தஹல் பிரசண்டா நான்கு நாள் அதிகாரத்துவ பயணமாக புதுடெல்லி வந்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் நேப்பாள பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட பின்னர் அவர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதன் முறையாகும்.
இதையடுத்து அவர் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை மேற்கொண்டார் (படம்).
அதன் தொடர்ச்சியாக வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு ஏதுவாக ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான சரக்கு ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்த இரு தலைவர்களும் எல்லைப் புறங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகளை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தனர்.

