புதுடெல்லி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தமது டெல்லி பயணத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார்.
இதையடுத்து பாஜக, தெலுங்கு தேசம் கட்சிகள் இடையே கூட்டணி மலர வாய்ப்புள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நடப்பாண்டு இறுதியில் தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதையடுத்து அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், அங்கு கூட்டணியைப் பலப்படுத்துவதில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.
கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் இடம்பெற்றிருந்தது. அடுத்த தேர்தலில் அக்கூட்டணியில் இருந்து விவகினார் சந்திரபாபு நாயுடு.
இந்நிலையில் இரு கட்சிகளும் மீண்டும் நெருங்கி வருகின்றன. எனவே தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் நடப்பு முதல்வர் சந்திரசேகர ராவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக பாஜகவும் தெலுங்கு தேசம் கட்சியும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரையும் பாஜக தேசியத் தலைவரையும் அடுத்தடுத்து சந்தித்துப் பேசிஉள்ளார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு.
இருவருடனும் அவர் சுமார் அரைமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது.
இரு தரப்பும் தெலுங்கானா மாநிலத் தேர்தலை இணைந்து எதிர்கொள்வது குறித்து முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

