பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமைந்துள்ள நிலையில், பாஜக ஆட்சியில் அமுல்படுத்தப்பட்ட பசுவதைத் தடுப்பு சட்டம், மதமாற்றத் தடைச் சட்டம், ஹிஜாப் தடை உள்ளிட்டவற்றை நீக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து கர்நாடக கால்நடைத்துறை அமைச்சர் வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பசுவதைத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர முடிவெடுத்துள்ளோம்.
“இறைச்சிக்காக எருமைகளை வெட்டும்போது ஏன் பசுக்களை வெட்டக் கூடாது? அதில் என்ன தவறு இருக்கிறது?’’ என கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறும்போது, ‘‘பசுவதைத் தடுப்புச் சட்டத்தை நாங்கள் கொண்டுவரவில்லை. ஏற்கெனவே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கொண்டுவந்த சட்டத்தையே திருத்தினோம்.
“பாஜக ஆட்சியில் கொண்டுவந்த திருத்தங்களை மாற்ற முடிவெடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. பசுவை தெய்வமாக வணங்கும் பழக்கம் நம் நாட்டில் உள்ளது. இந்துக்களுக்கு பசுவுடன் உணர்வு ரீதியான பிணைப்பு உள்ளது. அதனைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டால் காங்கிரசுக்குத் தக்க பாடம் புகட்டப்படும்,’’ என்றார்.
இந்நிலையில், கர்நாடக அரசையும் முதல்வர் சித்தராமையாவையும் கண்டித்து இளைஞர் பாஜகவினர் பெங்களூரு, மைசூரு, மங்களூரு, ஷிமோகா உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பசுவதைத் தடுப்புச் சட்டத்தை நீக்கக்கூடாது என முழக்கம் எழுப்பினர்.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் (படம்) செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘இந்த சட்டம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறோம்,’’ என்று கூறினார்.