சிபிஐ அதிரடி நடவடிக்கை: ரயில்வே ஊழியர்கள், ஒப்பந்தப் பணியாளர்களிடம் தீவிர விசாரணை
பாலேஸ்வர்: ஒடிசா மாவட்டம் பாலேஸ்வர் அருகே கடந்த 2ஆம் தேதி நிகழ்ந்த ரயில் விபத்தில் 278 பேர் உயிரிழந்தனர்.
ரயில் விபத்து தொடர்பாக தென்கிழக்கு வட்டார ரயில்வே துறை பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்திரி விசாரணை நடத்தினார். விபத்துக்குள்ளான ரயில்களை இயக்கியவர்கள் விசாரணைக்கு முன்னிலையாக அழைப்பாணை அனுப்பி உள்ளார். இந்த விபத்து தொடர்பாக ரயில் இயக்குநர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளிட்ட 55 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவிருக்கிறது.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த ஒடிசா அரசின் ஒப்புதலுடன் ரயில்வே அமைச்சு பரிந்துரைத்தது.
இதையடுத்து திங்கள்கிழமை சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள், விபத்து குறித்து நான்கு பிரிவுகளின்கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, விபத்தின்போது பணியில் இருந்த ரயில்வே துறை அதிகாரிகள் சிலரின் கைப்பேசிகளை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசிகளில் பதிவாகி உள்ள உரையாடல்கள், அழைப்புகள், சமூக ஊடகப் பயன்பாடு உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரயில் இயக்குநரிடம் விசாரணை நடத்தவும் சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரயில் விபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்னும் 83 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. இதையடுத்து, அவர்களது உறவினர்களின் மரபணு மாதிரியைப் பெறும் முயற்சியில் ஒடிசா மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இதுவரை 33 பேரின் மரபணு மாதிரிகளை அதிகாரிகள் புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் மத்திய, மாநில அரசுகளும் ரயில்வே துறையும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருந்தன.
அதன்படி, 688 பேருக்கு ஏறக்குறைய ரூ.19.26 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என தென்கிழக்கு வட்டார ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

