புதுடெல்லி: மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்று டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்தால் பிரச்சினைக்குத் தீர்வுகாணலாம் என்று மல்யுத்த வீரர்களுக்கு டுவிட்டர் பதிவு வாயிலாக அழைப்பு விடுத்தார். அதையடுத்து மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் சத்யாவார்ட் கடியன் உள்ளிட்டோர், புதுடெல்லியில் உள்ள அமைச்சர் அனுராக் தாக்கூரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தச் சந்திப்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் கலந்துகொள்ளவில்லை என்று அமைச்சர் தாக்கூரின் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹரியானாவின் பலாலியில் நடைபெறும் பஞ்சாயத்தில் பங்கேற்க வினேஷ் போகாட் சென்றிருப்பதால் இந்தச் சந்திப்பில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கும் மல்யுத்த வீரர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடப்பது இது இரண்டாவது முறையாகும்.
சந்திப்பின்போது, அமைச்சர் தாக்கூரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலை வெளிப்படையாக நடத்த வேண்டும்.
மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்
மல்யுத்த கூட்டமைப்பில் பிரிஜ் பூஷன் சிங்கின் குடும்பத்தினர் யாரும் இடம்பெறக் கூடாது
கடந்த 28ம் தேதி நடந்த போராட்டத்தை அடுத்து தங்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.
இந்த ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கைகள் குறித்து அரசு தரப்பில் உடனடியாக தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக கடந்த சனிக்கிழமை இரவு மல்யுத்த வீரர்களும் அவர்களின் பயிற்றுவிப்பாளர்களும் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

