புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு எதிராக வெறுப்புப் பேச்சு புகார், பொய்யான குற்றச்சாட்டு கூறியதற்காக வழக்குப் பதிவு செய்யக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அம்மனுவிற்குப் பதில் அளிக்கும்விதமாக அது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையில், "டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின்போது மல்யுத்த வீராங்கனைகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எழுப்பிய முழக்கம், வெறுக்கத்தக்க பேச்சு வகையின் கீழ் வரக்கூடியது.
இது அவர்கள் பிரதமரை கொலைசெய்யப் போவதாக மிரட்டியதைத் தெளிவாக உணர்த்தியது," என்று புகார்தாரர் தெரிவித்திருந்தார்.
ஆனால், புகார்தாரர் ஆதாரமாக அளித்திருந்த காணொளிக் காட்சிகளில் எந்தவிதமான வெறுக்கத்தக்க முழக்கங்களும் இல்லை.
போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் அதுபோன்ற முழக்கங்களையும் எழுப்பவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் வீரர்கள் மீதான அந்த புகார் மனுவைத் தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தியுள்ளது.

