அகமதாபாத்: குஜராத் மாநிலத்தைக் கடந்த சில நாட்களாக அச்சுறுத்திய பிபர்ஜாய் புயல் கரையைக் கடந்த நிலையில் அது ராஜஸ்தானை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயல், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜாக்குவா போர்ட் அருகே நேற்று முன்தினம் மாலை கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்த புயல் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். 23 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஐநூறுக்கும் மேற்பட்ட மரங்களும் ஏராளமான மின்சாரக் கம்பங்களும் முறிந்து கீழே விழுந்துள்ளன. சில இடங்களில் டிரான்ஸ்பார்மர்களும் கீழே விழுந்துள்ளன.
இதனால், கட்ச் மாவட்டம் உட்பட குஜராத்தின் ஒரு சில மாவட்டங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. 940 கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. காற்றும் வேகமாக வீசி வருவதால் கடலோர மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வானிலை அசாதாரணமாக இருப்பதால் தற்போது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் புயல் முழுமையாக கடந்த பிறகு வெளியே வரலாம் என்றும் பூஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு பல்வேறு இடங்களில் மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்வர் பூபேந்திர படேல், புயல் பாதிப்பு குறித்து காந்தி நகரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதற்கிடையே குஜராத்தில் கரையைக் கடந்த பிபர்ஜாய் புயல், ராஜஸ்தானை நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் காரணமாக ராஜஸ்தானின் ஜலோர், பார்மெர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மணிக்கு 60-70 மில்லி மீட்டர் மழை பதிவாகி வருவதாகத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இவ்விரு மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகபட்சமாக 200 மில்லி மீட்டர் மழை பதிவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் ராஜஸ்தானை நோக்கி நகர்வதை அடுத்து அம்மாநிலத்தில் மாநிலப் பாதுகாப்புப் படையின் 17 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த ராஜஸ்தான் தலைமைச் செயலர் உஷா ஷர்மா, புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள உயரதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

