புதுடெல்லி: இந்தியாவில் முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் எச்சரித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் தேசிய அளவில் பல்வேறு கட்சிகள் முக்கிய முயற்சிகளை எடுத்து வருகின்றன.
காங்கிரஸ் கட்சியும் பாஜகவை எதிர்க்கும் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டு மூன்றாவது அணி அமைக்கப்பட்டால் அது பாஜகவுக்கு சாதகமாக அமையும்.
எதிர்க்கட்சிகள் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக பீகார் தலைநகர் பாட்னாவில் ஜூன் 23ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிபிஐ தேசிய செயலாளர் டி. ராஜா, சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ- எம்எல் திபாங்கர் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதே சமயத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வலிமைபெற்றுவிடக்கூடாது என்பதில் பாஜக அரசு எச்சரிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை ஆளும் பாஜக நடத்தலாம் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகிறார்.

