வழிபாட்டுத் தலம் இடிப்பு;
வன்முறை வெடித்தது
காந்திநகர்: குஜராத் மாநிலம் ஜுனாஹா மாவட்டத்தின் ஜூனாஹா நகரில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலத்துக்கு அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து தர்க்கா கட்டப்பட்டுள்ளது. இதை அகற்ற அதிகாரிகள் முயற்சி நேற்று செய்தபோது வன்முறை வெடித்தது.
வெள்ளிக்கிழமை இரவு இஸ்லாமிய மதத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் நிறுத்தப் பட்டிருந்த வாகனங்களுக்குத் தீ வைத்த வன்முறையாளர்கள் காவல்துறை சோதனை சாவடி களைத் தாக்கினர். இந்தச் சம்பவத்தில் டிஎஸ்பி உள்பட மூன்று காவலர்கள் காயமடைந்தனர் என்று தினத்தந்தி நாளேடு தெரிவித்தது. வன்முறை கட்டுக்கடங்காமல் போனதால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தார். பலர் காயம் அடைந்தனர். 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் பாஜக மீது
ஊழல் புகார்; விசாரணை
பெங்களூரு: கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அம்மாநிலத்தின் கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே பெங்களூருவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கர்நாடகாவில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. இந்த நிலையில் அமைச்சர் பிரியங்க் கார்கே, முந்தைய பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து வெவ்வேறு வகையான ஊழல் புகார்கள் உள்ளதால், வெவ்வேறு ரீதியில் குழுக்கள் மூலம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்றார்.

