புதுடெல்லி: இந்தியாவில் கனரக வாகன ஒட்டுநரின் இருக்கைப் பகுதியில் குளிரூட்டி பொருத்துவது 2025ஆம் ஆண்டில் இருந்து கட்டாயமாக்கப்படும்.
நீண்டநேரம் வாகனத்தை இயக்கும் ஒட்டுநர்கள் களைப்படையாமல் இருக்க இது பெரிதும் உதவும் எனச் சொல்லப்படுகிறது. ஒட்டுநரின் இருக்கைப் பகுதியில் செய்யப்படும் இந்த மாற்றம் பெரும்பாலான விபத்துக்களைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுநர்கள் ஓய்வின்றி உழைப்பது பெரும்பாலான விபத்துகளுக்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.
வால்வோ, ஸ்கேனியா போன்ற கனரக வாகன நிறுவனங்கள் ஏற்கெனவே ஒட்டுநரின் இருக்கைப் பகுதிக்கு குளிரூட்டி வசதியை அமைத்துள்ளபோதும் பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் இன்னும் அதனைச் செய்யவில்லை.
இந்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி திங்கட்கிழமை விடுத்த அறிவிப்பில், கனரக வாகனங்களின் ஓட்டுநரின் இருக்கைப் பகுதியில் குளிரூட்டி பொருத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளேன் என்றும் இந்த மாற்றம் நடைமுறைக்கு வர 18 மாதங்கள் தேவைப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குளிரூட்டி வசதியை ஏற்படுத்தித் தர ஒரு வாகனத்திற்கு 10,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாய்வரை செலவாகும் என்று தோராயமாகக் கணிக்கப்பட்டுள்ளது.