நியூயார்க்: நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாட்டு தலைமையகத்தில் புதன்கிழமை அனைத்துலக யோகா தினக் கொண்டாட்டத்தை வழிநடத்திய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ எனும் இலக்கை அடைய கைகோக்குமாறு மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
திரு மோடி முன்மொழிந்த நடைமுறையைக் கடைப்பிடித்து, ஜூன் 21ஆம் தேதியை அனைத்துலக யோகா தினமாக ஐநா 2014ல் அறிவித்திருந்தது.
ஐநா தலைமையகத்தில் மஞ்சள் பாய்களில் அமர்ந்திருந்து யோகாவில் கலந்துகொண்டவர்களிடம், “யோகாவின் சக்தியைப் பயன்படுத்தி ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமல்லாமல், நம் மீதும் ஒருவர் மற்றொருவர் மீதும் கனிவன்புடன் இருப்போம்,” என்று திரு மோடி கூறினார்.
“யோகாவின் சக்தியைப் பயன்படுத்தி நட்பின் பாலத்தை எழுப்புவோம். அமைதியான உலகம், தூய்மையான, பசுமையான, நீடித்த நிலைத்தன்மையுடைய எதிர்காலத்தையும் உருவாக்குவோம்,” என்றார் அவர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திரு மோடி அமெரிக்கா சென்றுள்ளார். 2014ல் பிரதமர் பதவியை ஏற்ற பிறகு, திரு மோடி ஐந்து முறை அமெரிக்காவுக்குச் சென்றிருக்கிறார். ஆனால், அரசுமுறை பயணமாக முழு அரசதந்திர நிலையுடன் அவர் அமெரிக்கா சென்றிருப்பது இதுவே முதன்முறை.