சுல்தான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோ முதல் காஜிப்பூர் வரை 341 கி.மீ. நீளத்துக்கு பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை உள்ளது.
இந்தச் சாலையில், பார்வையாளர்களின் ஆரவாரத்துடன் இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் தரையிறங்கும் பயிற்சியில் ஈடுபட்டதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் இறங்கி ஏறும் பயிற்சியில் இந்திய விமானப்படையின் சுகோய், மிராஜ் போர் விமானங்கள் ஈடுபட்டன.
அதற்காக இந்த நெடுஞ்சாலையின் குரேபார் பகுதியில் 12 கி.மீ. தூரத்துக்குப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு, ‘டச் அண்ட் கோ’ பயிற்சியில் போர் விமானங்கள் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியை ஜெய்சிங்பூர் எம்எல்ஏ ராஜ் பாபு, மாவட்ட நீதிபதி ஜஜித் கவுர், விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.
அத்துடன், சுற்றுப்புறங்களில் உள்ள இருபது கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அங்கு திரண்டு இந்த நிகழ்வைப் பார்த்து ரசித்து உற்சாகமாகக் குரல் எழுப்பினர்.
இப்பயிற்சியின்போது நெடுஞ்சாலையின் குறுக்கே ஒருநாய் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதையடுத்து, அவ்வாறு நாய்கள் குறுக்கே செல்லாமல் தடுப்பதற்காகக் காவலர்கள் நிறுத்தப்பட்டனர்.