ஹைதராபாத்: இந்திய அரசாங்கத்தின் ‘போதைப்பொருள் எதிர்ப்பு’ விழிப்புணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக, பறிமுதல் செய்யப்பட்ட 8,946 கிலோ போதைப்பொருள்கள் திங்கட்கிழமை தீ வைத்து அழிக்கப்பட்டன.
போதைப் புழக்கம், சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான அனைத்துலக நாளன்று எரித்துச் சாம்பலாக்கப்பட்ட அந்தப் போதைப்பொருள்களின் மதிப்பு ரூ.295 கோடி என்று சொல்லப்பட்டது.
வருவாய்ப் புலனாய்வு இயக்ககமும் ஹைதராபாத் சுங்கத்துறையும் கடந்த சில ஆண்டுகளில் அந்தப் போதைப்பொருள்களைக் கைப்பற்றி இருந்தன.
அவற்றில் 11 கிலோ ஹெராயினும் அடங்கும். அதன் மதிப்பு ரூ.77 கோடி என்று கூறப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மலாவி, தான்சானியா, அங்கோலா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஹைதராபாத் ராஜீவ் காந்தி அனைத்துலக விமான நிலையம் வழியாக வந்த பயணிகளிடமிருந்து அது பறிமுதல் செய்யப்பட்டது.
ஹைதராபாத் கழிவு மேலாண்மைத் திட்டத்திற்கான நிலப்பகுதியில், சுங்கத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் அந்தப் போதைப்பொருள்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

