புதுடெல்லி: இந்தியா 100 ஆண்டு காலமாக அடிமைப்பட்டு இருந்ததன் விளைவாக அதன் கல்வி மையங்கள் அழிந்துவிட்டன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழாவில் வெள்ளிக்கிழமை கலந்துகொண்ட பிரதமர், டெல்லி பல்கலைக்கழகம் வெறும் பல்கலைக்கழகம் அல்ல, அது ஓர் இயக்கம் என்று மாணவர்களிடையே வலியுறுத்திக் கூறினார்.
உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கைக் கொண்டிருந்த இந்தியாவின் கல்வி மையங்கள் வெகு சிறப்பான இடத்தைப் பிடித்து இருந்ததாகவும் ஆனால் 100 ஆண்டுகால அடிமைத்தனம் காரணமாக இந்தியாவின் கல்வி மையங்கள் மட்டுமின்றி வளர்ச்சியும் முடங்கிவிட்டதாக வும் அவர் குறிப்பிட்டார்.
இருந்தாலும் இந்தியப் பல்கலைக்கழகங்களின் உலகளாவிய அங்கீகாரம் இன்று அதிகரித்து வருகிறது என்றும் அண்மைய ஆண்டுகளில் ஐஐடிகள், ஐஐஎம்கள், எய்ம்ஸ் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கியூ எக்ஸ் என்ற உலக பல்கலை தரவரிசையில், 12 இந்திய பல்கலைகள் மட்டுமே இருந்ததாகவும் அது இப்போது 45ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2014 ஆண்டுக்கு முன்னதாக இந்தியாவில் 100 புதிய நவீன நிறுவனங்கள் செயல்பட்டன. அவற்றின் எண்ணிக்கை 100,000த்தையும் தாண்டிவிட்டதாக திரு மோடி பெருமைபட தெரிவித்தார்.
பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
இளம் மாணவர்களிடையே கலந்துறவாடி பேசி மகிழ்ந்து பல தகவல்களையும் பகிர்ந்து கொள்ள விரும்பி தான் ரயிலில் வந்ததாக பிரதமர் கூறினார்.