செகந்தராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் செகந்தராபாத் நகரில் ஒரு பெண் கர்ப்பமாக இருந்ததை மறைத்து, அந்தப் பெண்ணை இளைஞர் ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்ததால் முதலிரவின்போதே பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்ததால் பேரதிர்ச்சி ஏற்பட்டது.
அந்தப் பெண் தகாத உறவால் கர்ப்பிணியானது தெரிந்தே அவரின் பெற்றோர் நொய்டா நகரைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு அந்தப் பெண்ணை மணமுடித்து கொடுக்க முடிவு செய்தனர்.
பெண் பார்க்க வந்தபோதே மணப்பெண்ணின் வயிறு பெரிதாக இருந்தைப் பார்த்த மணமகன் வீட்டார் அது பற்றி கேட்டபோது, அண்மையில் சிறுநீரகத்தில் இருந்த கல்லை அகற்றுவதற்காக அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடந்ததாகவும் அதனால் வயிறு பெரிதாக இருப்பதாகவும் கூறி ஒரு வழியாக மணப்பெண்ணின் பெற்றோர் சமாளித்துவிட்டனர்.
இதையடுத்து இம்மாதம் 26ஆம் தேதி இருவருக்கும் திருமணம் வெகுவிமரிசையாக நடந்தது. அன்று இரவே முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அறைக்குள் வந்த மணமகள், திடீரென வயிற்று வலியால் துடித்தார். பயந்துபோன மாப்பிள்ளை அவரின் குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு அந்தப் பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
அங்கு சென்றதும் அந்தப் பெண்ணிற்கு அழகான ஒரு பெண் குழந்தைப் பிறந்தது. கடும் கோபமடைந்த மணமகன் வீட்டார், பெண் வீட்டாரை உடனடியாக நொய்டாவுக்கு வரும்படி பணித்தனர்.
தங்கள் பெண்ணை ஏற்றுக்கொள்ளும்படி பெண்ணின் பெற்றோர் கெஞ்சினர். ஆனால், மணமகன் வீட்டார் மறுத்துவிட, தங்கள் பெண்ணையும் பேத்தியையும் அழைத்துக் கொண்டு அந்தப் பெற்றோர் செகந்திராபாத் திரும்பிவிட்டனர்.
மணமகன் வீட்டார் காவல்துறையில் புகார் அளித்ததால் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள் என்று ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

