புதுடெல்லி: இந்தியாவின் தென்கிழக்கு ரயில் பாதைக்கான பொது மேலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் மோசமான ரயில் விபத்து நிகழ்ந்தது. மூன்று ரயில்கள் மோதிக்கொண்டு ஏற்பட்ட அந்த விபத்து நூற்றுக்கணக்கானோரைப் பலிவாங்கியது.
அதைத் தொடர்ந்து தென்கிழக்கு ரயில் பாதைக்கான பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அப்பொறுப்பை இனி அனில் குமார் மிஷ்ரா ஏற்பார்.
அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றின் மூலம் இந்திய ரயில்வே துறை இந்த விவரங்களை வெளியிட்டது.
சென்னையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுராவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஷாலிமார் எக்ஸ்பிரஸ், ஒரு சரக்கு ரயில் ஆகியன ஜூன் மாதம் இரண்டாம் தேதியன்று பாஹநாகா ரயில் நிலையத்துக்கு அருகே மோதிக்கொண்டு விபத்துக்கு உள்ளாயின. அச்சம்பவத்தில் 291 பேர் மாண்டனர், 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கூடுதலானோர் மரணமடைந்ததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
புபனேஸ்வர் நகரில் உள்ள ஏஐஐஎம்எஸ் எனப்படும் இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் விபத்தில் மாண்ட 52 பேரின் உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படாமல் இருக்கின்றன. 81 உடல்களில் 29 அடையாளம் காணப்பட்டதாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.