லாட்டரியில் ரூ.1 கோடி வென்றவருக்கு காவல்துறை பாதுகாப்பு

1 mins read
c1732602-2429-442b-9a0a-f8e18549685c
படம்: - இந்திய ஊடகம்

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிர்ஷூ ராபா. 

அவர் திருவனந்தபுரத்தில் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். ராபா கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 லாட்டரி சீட்டுகளை வாங்கினார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை ராபா வாங்கிய சீட்டுக்கு முதல்பரிசாக ரூ.1 கோடி விழுந்தது. 

இதுபற்றிய தகவல் சில நிமிடங்களில் அங்கிருந்த வடமாநில தொழிலாளர்களுக்கு இடையே வேகமாகப் பரவியது.

மற்ற தொழிலாளிகள் தம்மை கொலை செய்து விட்டு லாட்டரி சீட்டை பறித்துக்கொள்வார்களோ என்ற பயத்தில் ராபா தம்பானூர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்து விவரத்தை கூறினார்.

இதைத்தொடர்ந்து, வங்கி அதிகாரிகளை காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களிடம் லாட்டரி சீட்டை ஒப்படைக்க வைத்தனர் காவல்துறை அதிகாரிகள். 

தாம் ஊருக்கு செல்லும் வரை தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ராபா கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ராபாவை ரகசியமாக ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.