புதுடெல்லி: இந்தியா, தாய்லாந்து மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளுக்கு இடையே 1,400 கி.மீ. நீள நெடுஞ்சாலைப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இதில், 70 விழுக்காட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த முத்தரப்புச் சாலையின் மூலம் தென்கிழக்கு ஆசியாவுடன் தரைவழிப் போக்குவரத்துக்கான தொடர்புகளை அதிகரிக்க முடியும். இவ்வாறு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.
குறிப்பாக, வர்த்தகம், கல்வி, சுகாதாரம், சுற்றுலா போன்ற துறைகளில் மூன்று நாடுகளும் வளர்ச்சியடைய இந்தச் சாலை பெரிதும் துணைபுரியும் என்ற அமைச்சர் நிதின் கட்காரி கூறினார். இந்த முத்தரப்பு நெடுஞ்சாலை மியன்மார் வழியாக தாய்லாந்தில் உள்ள மே சோட்டுடன் இந்தியாவின் மணிப்பூரில் உள்ள மோராவை இணைக்கும்.
2019ஆம் ஆண்டுக்குள் இந்தச் சாலைப் பணிகளை முடிக்க இந்தியா திட்டமிட்டிருந்தது. கொரோனா தொற்றுக் காலத்தில் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டதால் பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.