சென்னை: சென்னையில் காவல்துறையைச் சார்ந்த காவலர்கள் முக்கியமான பணிகளில் ஈடுபட்டிருக்கும்போது கைத்தொலைபேசியைப் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறிப்பாக போக்குவரத்துக் காவல்துறையினர், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருக்கும்போது கைத்தொலைபேசி பயன்படுத்த அனுமதியில்லை. அவ்வாறு அவர்கள் கைத்தொலைபேசி பயன்படுத்தும்போது கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அதனால் விபத்து நேரிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சட்டம், ஒழுங்கு பாதுகாப்புப் பணிகள், கோவில் விழாக்கள், போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் பணி ஆகியவற்றிலும் கைப்பேசிகள் பயன்படுத்தக் கூடாது. இதனை உயர் அதிகாரிகள் தங்கள் காவலர்களுக்கு அறிவுறுத்தவேண்டும்.
அத்துடன் அனைத்துக் காவல்நிலையங்களிலும் தகவல் பலகைகளில் இந்தத் தகவல் இடம்பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், நாள்தோறும் நடைபெறும் அணிவகுப்பின்போது உயர் அதிகாரிகள் இந்த அறிவுரையை எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் அந்த உத்தரவு அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டார்.

