காப்பகப் பெண்களுக்குப் பாலியல் தொல்லை; உரிமையாளர் கைது

காப்பகப் பெண்களுக்குப் பாலியல் தொல்லை; உரிமையாளர் கைது

1 mins read
5eaafa79-5e3b-4e34-a2d2-2ba67dbd91f5
படம்: - தமிழ் முரசு

திருப்போரூர்: பணங்காட்டுப்பாக்கம் பகுதியில் வீரமணி என்பவர், காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறார். அன்பகம் என்ற பெயரிலான அந்தக் காப்பகத்தில் மனவளர்ச்சி குன்றியோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில், காப்பாகத்தில் உள்ள பெண் ஒருவருக்கு, காப்பகத்தின் உரிமையாளர் வீரமணி பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப்பெண் சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்துள்ளார்.

அந்தப் பதிவின் அடிப்படையில், தாம்பரம் கோட்டாட்சியர், அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டு அதை உறுதிசெய்து பின் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில் காவல்துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் காப்பகத்தில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், காப்பகத்தில் தங்கி உள்ள மனவளர்ச்சி குன்றிய பெண்களிடம், வீரமணி பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உறுதியானது.

இதைத்தொடர்ந்து காப்பக உரிமையாளர் வீரமணி உட்பட 2 பேரை காவல்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை காலை கைது செய்தனர். அத்துடன் அந்தக் காப்பகத்தில் இருந்தவர்களை வேறு காப்பகத்துக்கு இடமாற்றம் செய்தனர்.

குறிப்புச் சொற்கள்