திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் கடந்த 2 நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பை, அச்சன்கோவில் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மாவட்டம் தோறும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையால் பல்வேறு இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கனமழை காரணமாக கேரளாவில் உள்ள ஆறு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரள மாநிலத்தில் முண்டக்காயம் சென்னாப்பாறை ரப்பர் தோட்டத்தில் உள்ள ஓடையில் கனமழையால் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரை கடக்க முடியாமல் ரப்பர் தோட்டத்தில் 17 தொழிலாளர்கள் தவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்தவர்கள், இரு கரைக்கும் இடையே கயிறு கட்டி தொழிலாளர்களை பத்திரமாக மீட்டனர்.

