போபால்: பழங்குடியின இளைஞர் ஒருவரின் முகத்தில் சிறுநீர் கழிக்கும் காணொளி ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பிரவேஷ் சுக்லா என்பவரை மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தின் பஹ்ரி பகுதியில் குப்ரி என்னும் சிற்றூரில் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர். பாதிக்கப்பட்ட இளைஞரும் குற்றவாளியும் குப்ரி சிற்றூரைச் சேர்ந்தவர்கள்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைத் தடுக்கும் வகையிலான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட இளைஞர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் பிரவேஷ் சுக்லா, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் எனவும் சித்தி தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கேதார்நாத் சுக்லாவின் பிரதிநிதி எனவும் சமூக சமூக ஊடகவாசிகளும் எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், இதனை பாஜக சட்டமன்ற உறுப்பினர் கேதார்நாத் சுக்லா மறுத்துள்ளார்.
இதுகுறித்து கேதார்நாத் சுக்லா கூறும்போது, “குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆடவர் எனது பிரதிநிதி அல்ல. கட்சியில் அவர் எந்தப் பதவியும் வகிக்கவில்லை. அவர் கட்சி உறுப்பினர்கூட அல்ல. நான் மக்கள் பிரதிநிதியாக இருப்பதால் எவரும் என்னுடன் புகைப்படம் எடுத்திருக்கலாம்,’’ என்று கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது டுவிட்டர் பதிவில் “குற்றவாளியைக் கைது செய்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்,’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரவேஷ் சுக்லா மீது தேசிய பாதுகாப்பு சட்டம், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.