புதுடெல்லி: இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் அறிமுகமாகி சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதேபோல் எத்தனால் மூலம் வாகனம் ஓடத் தொடங்கும் காலம் வெகு அருகில்தான் உள்ளது.
அப்போது எத்தனால் மூலம் 60 விழுக்காடு வாகனங்களும் மின்சாரத்தைக் கொண்டு 40 விழுக்காடு வாகனங்களும் ஓடினால், நம் நாட்டில் பெட்ரோல், டீசலின் விலை அடிமட்டத்திற்குச் சென்றுவிடும் என்று அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளார்.
இதனால் பொதுமக்களும் நிறுவனங்களும் பயன்பெறுவதோடு, சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறையும் என்றார்.
இதற்காகவே நான் வரும் ஆகஸ்ட் மாதத்தில் டொயோட்டோ நிறுவனத்தின் புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளேன். அவை அனைத்தும் எத்தனாலில் இயங்க உள்ளன. இதுபோன்றவற்றால் நம் நாட்டில் எரிபொருள் இறக்குமதி குறையும். இப்போது நாட்டில் ரூ.16 லட்சம் கோடிக்கு எரிபொருள் இறக்குமதியாகிறது.
ராஜஸ்தானில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் எரிசக்தி, விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துப் பேசினார்.