அகமதாபாத்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திமீதான அவதூறு வழக்கின் தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்கும்படி கோரிய மனுவை குஜராத் மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியபோது மோடி என்ற பெயர் குறித்து ராகுல் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார்.
அதன் தொடர்பில் குஜராத் சட்டமன்ற உறுப்பினர் பூர்னேஷ் மோடி தொடுத்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஈராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனால் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை ராகுல் காந்தி இழக்க நேரிட்டது.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் பதிவு செய்த மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், முன்னைய தீர்ப்பு சரியானது, நியாயமானது, சட்டத்துக்கு உட்பட்டது என்று தீர்ப்பளித்தது.
வீர சாவர்க்கர் குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி முன்வைத்த கருத்துகளை உயர் நீதிமன்றம் சுட்டியது.
“அரசியலில் தூய்மை முக்கியம். வீர சாவர்க்கரின் பேரன், புனே நீதிமன்றத்தில் ராகுல் காந்திமீது வழக்குப் பதிவு செய்துள்ளார்,” என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது. ராகுல் மீது ஏறத்தாழ 10 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவர் எந்த அடிப்படையும் இன்றி வழக்குகளில் இடைக்காலத் தடை விதிக்கக் கோருவதாகவும் அது கூறியது.
ராகுல் காந்தி இவ்வழக்கு தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுப்பார் என்று கருதப்படுகிறது. உச்ச நீதிமன்றமும் அம்மனுவை நிராகரித்தால் ராகுல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட இயலாது.
ஜூலை 20ஆம் தேதி தொடங்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என்று கருதப்படுகிறது.

