பெங்களூரு: இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ அறிவித்தது.
ஜி-20 விண்வெளி பொருளியல் தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், சந்திரயான்-3 விண்கலம் ஏவுகணை, மார்க்-III (எல்விஎம்3) மூலம் ஏவப்படும் என்றார்.
இதற்காக ஜூலை 12 முதல் 19 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சந்திராயன் 2க்குப் பிறகு, சந்திரயான்-3 என்பது இந்தியாவின் மூன்றாவது நிலவு திட்டமாகும்.
சந்திரனின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரை இறங்குவதற்கும் உலாவுவதற்கும் இறுதி வரை தனது திறனை இந்த விண்கலம் வெளிப்படுத்தும். திட்டமிட்டபடி ஜூலை 14ஆம் தேதி சந்திராயன்-3 விண்கலம் ஏவப்பட்டால் வருகிற ஆகஸ்ட் 23 அல்லது 24ஆம் தேதி சந்திரனின் மேற்பரப்பில் விண்கலம் தரையிறங்கும் என்று அவர் தெரிவித்தார்.

