திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் பிரசாதம் சாப்பிட்ட 80 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தேமாஜி மாவட்டத்தில் உள்ள ஜோனாய் பகுதியில் தேகாபம் அப்மனோலா கிராமத்தில் நடைபெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில் கறுப்பு கொண்டைக்கடலை மற்றும் பச்சைப்பயறு பிரசாதமாக வழங்கப்பட்டது. குழந்தைகள், பெண்கள் உட்பட பலர் பிரசாதத்தை விரும்பி வாங்கிச் சாப்பிட்டனர்.
இந்த பிரசாதத்தை சாப்பிட்டவுடன் அவர்களில் பலருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது.
இதையடுத்து அப்பகுதிக்கு மருத்துவர்கள், தாதியர்கள் குழு விரைந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு உள்ள பள்ளியில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதே இடத்தில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சிலர் தேமாஜி, சிலபதார் மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆறு பேரின் உடல் நிலை மட்டும் கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

