மும்பை: உலக அளவில் செயல்படும் யாசகர்களில் ஆகப்பெரும் பணக்காரர் என்று கூறப்படும் மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின், சொத்து மேல் சொத்து சேர்த்தும் இன்னமும் யாசகத் தொழிலை கைவிடவில்லை.
மும்பையில் ரயில் நிலையம், ஆசாத் திடல் போன்ற பிரபலமான மக்கள் நட மாட்டம் அதகமான இடங்களில் ஏழ்மை காரணமாக பாரத் ஜெயின் யாசகம் கேட்டு அலைந்து திரிந்தார்.
முதலில் வருமானம் குறைவுதான் என்றாலும் பிறகு தன் திறமையால் மாதம் ரூ.60,000 முதல் ரூ.75,000 வரை அவர் திரட்டினார்.
இரண்டு மணி நேரத்தில் ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை சம்பாதித்து விடுவதாக பாரத் ஜெயின் தெரிவித்தார்.
கையில் பணம் சேர்ந்ததும் மும்பையில் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டை ரூ.1.2 கோடி விலைக்கு அவர் வாங்கினார்.
தானே நகரில் இரண்டு கடைகளை கெட்டிக்காரதனமாக வாங்கி அவற்றை வாடகைக்கு விட்டு அதன் மூலம் மாதம் ரூ.30,000 வருமானத்தைப் பெறத் தொடங்கினார். இவரின் நிகர சொத்து மதிப்பு ரூ.7.5 கோடி (S$1,225,466) என்று தெரிவிக்கப்பட்டது.
இவ்வளவு சொத்துகள் இருந்தும் சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினஸ் ரயில் நிலையம், ஆசாத் மைதானம் உள்ளிட்ட மும்பை வீதிகளில் யாசகம் கேட்டு அலைவதை இன்றும் பாரத் ஜெயின், நிறுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
பாரத் ஜெயினுக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.