மும்பை: இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ அதன் ஊழியர்கள் அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் (S$1.3 பில்லியன்) செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விப்ரோவில் 250,000 ஊழியர்கள் உள்ளனர்.
இந்தப் பயிற்சிக்காக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு விப்ரோ செலவு செய்யும். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குத் தீர்வுகளைத் தர விப்ரோ அதன் கிளவுட், தரவுப் பகுப்பாய்வு, ஆலோசனை, பொறியியல் குழுக்களைச் சேர்ந்த 30,000 ஊழியர்களை ஒன்றிணைக்கிறது.
தனது 25,000 பொறியாளர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி அளிக்க இருப்பதாக இந்தியாவின் ஆகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாட்டா ஆலோசனைச் சேவைகள் தெரிவித்துள்ளது.

