பிரான்சிடம் இருந்து இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை வாங்க தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான தற்காப்பு கொள்முதல் மன்றம் (டிஏசி) வியாழக்கிழமை (ஜூலை 13) ஒப்புதல் அளித்துள்ளது.
22 ஒற்றை இருக்கை கொண்ட ரஃபேல் கடல் விமானங்கள், நான்கு இரட்டை இருக்கைகள் கொண்ட பயிற்சியாளர் விமானங்கள் இதில் அடங்கும்.
மேலும், இந்திய கடற்படைக்காக மூன்று கூடுதல் ஸ்கோபீன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களையும் இந்தியா பிரான்ஸிடம் இருந்து வாங்க முடிவு செய்துள்ளது.
இந்த ஒப்பந்தங்களின் மதிப்பு சுமார் 90,000 கோடி (ஏறக்குறைய US10.9 பில்லியன் டாலர்)இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்ததை அடுத்து, 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். பயணத்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா பிரான்சிடம் இருந்து ஏற்கெனவே 36 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்கியுள்ளது.
ரஷ்யாவிலிருந்து சுகோய் ஜெட் விமானங்கள் இறக்குமதி செய்யப்பட்ட பிறகு, கடந்த 23 ஆண்டுகளில் இந்தியா வாங்கிய அதிக முதலீட்டு போர் விமானம் ரஃபேல் ஆகும்.