புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் தெற்கு டெல்லியில் உள்ள முன்னாள் டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித்திற்குச் சொந்தமான வீட்டில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், ராகுல் காந்திக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால் பாதுகாப்புக்கான ஒப்புதலுக்கு பிறகு இது அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அந்த மூவறை வீட்டில் வசித்து வந்த ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித் அடுக்குமாடி வீட்டுக்கு மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
கேரளாவில் உள்ள வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதை அடுத்து அவர் வசித்து வந்த அரசாங்க பங்களாவில் இருந்து காலி செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது.
ஷீலா தீட்சித் கடந்த 1991ஆம் ஆண்டு நிஜாமுதீன் ஈஸ்ட் வீட்டை வாங்கினார். அதன்பிறகு 1998 முதல் 2013 வரை டெல்லி முதலமைச்சராகவும், 2014ஆம் ஆண்டில் கேரளாவின் ஆளுநராகவும் இருந்தார்.
டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் கேரள ஆளுநராக இருந்த பிறகு நிஜாமுதீன் ஈஸ்ட் இல்லத்திற்கு குடிபெயர்ந்த ஷீலா தீட்சித் இறக்கும்வரை அங்கேயே வாழ்ந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஷீலா தீக்ஷித் இறந்தபோது அவரது வீட்டிற்கு இரங்கல் தெரிவிக்க ராகுல் காந்தி சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.