ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிஷ்தம்பேட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் போஷம். அவர் தன் மனைவி சங்கரம்மாவை கோடரியால் வெட்டிக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
கடந்த புதன்கிழமை வீட்டில் கோழிக்குழம்பு சமைக்கும்படி போஷம் கோழிக்கறி வாங்கிக் கொடுத்ததாகவும் சங்கரம்மா கோழிக்குழம்பு சமைக்காமல் கத்தரிக்காய் குழம்பு தயார் செய்ததாகவும் கூறப்பட்டது.
இதனால், மதுபோதையில் போஷம் மனைவியிடம் இரவு நேரத்தில் சண்டையிட்டதாகத் தெரிகிறது.
அதிகாலையில் விழித்த போஷம், வீட்டில் இருந்த கோடரியால் தூங்கிக்கொண்டிருந்த மனைவி சங்கரம்மாவை வெட்டிக் கொன்றார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
சங்கரம்மாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், சங்கரம்மா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய ஆடவரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.