புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தையொட்டி, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்காலப் பொருள்களையும் சிற்பங்களையும் திருப்பித் தர அமெரிக்கா முடிவு செய்தது.
இதையடுத்து நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த நிகழ்ச்சியில் 105 பழங்காலப் பொருள்களை தூதரக அதிகாரிகளிடம் அமெரிக்க அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இதற்குப் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “இது ஒவ்வோர் இந்தியனையும் மகிழ்விக்கும் நடவடிக்கை. இதற்காக அமெரிக்காவுக்கு நன்றி. இந்த விலைமதிப்பற்ற கலைப்பொருள்கள், மகத்தான கலாசார, சமய முக்கியத்துவம் வாய்ந்தவை. நமது பாரம்பரியம், வளமான வரலாற்றைப் பாதுகாப்பதில் எங்களின் அர்ப்பணிப்புக்கு இப்பொருள்கள் தாயகம் வருவது ஒரு சான்றாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த 12, 13ஆம் நூற்றாண்டுப் பளிங்கு வளைவு, மத்திய இந்தியாவைச் சேர்ந்த 14, 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்சரா, தென்னிந்தியாவைச் சேர்ந்த 14,15ஆம் நூற்றாண்டு சம்பந்தர், 17, 18ஆம் நூற்றாண்டு வெண்கல நடராஜர் ஆகியவை திருப்பி ஒப்படைக்கப்பட்ட பொருள்களில் அடங்கும்.