புதுடெல்லி: சீனாவைச் சேர்ந்த வாகனத் தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி மோட்டார்ஸ், (BYD Motors) இந்தியாவில் மின்சாரக் கார்களையும் மின்கலன்களையும் தயாரிக்க US$1 பில்லியன் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த நிறுவனத்தின் திட்டத்தை இந்திய அரசு நிராகரித்துவிட்டதாக இந்திய ஊடகம் தெரிவித்தது.
இந்தியாவின் ஹைதராபாத் நகரைத் தளமாகக் கொண்ட மேகா இன்ஜினியரிங் இன்ஃப்ராஸ்டக்சர்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து, சீன நிறுவனம் அத்திட்டத்தை இந்திய அரசிடம் தாக்கல் செய்து இருந்தது என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.
இந்தியாவில் சில ஆண்டுகளில் ஆண்டுதோறும் 100,000 மின் வாகனங்களைத் தயாரிக்க பிஒய்டி மோட்டார்ஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் சீன முதலீடுகள் இடம்பெறுவதால் பாதுகாப்பு குறித்து கவலை நிலவுகிறது. இந்தக் கவலையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாக சம்பந்தப்பட்ட ஒருவர் கூறியதாகவும் இத்தகைய முதலீடுகளுக்கு இப்போதைய வழிகாட்டி நெறிமுறைகள் அனுமதி அளிக்கவில்லை என்று வேறு ஓர் அதிகாரி தெரிவித்ததாகவும் எக்கனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த 1 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டம் குறித்து மற்ற துறைகளிடமும் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில், சீன முதலீடுகள் மீதான பாதுகாப்பு அம்சங்கள், தற்போதைய விதிமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து மூத்த அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்தச் சூழலில், இந்த முக்கியமான முதலீட்டு விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய அரசு அறிவித்த காரணத்தால் 1 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டம் தோல்வி அடைந்துள்ளது.


