பெங்களூரு: பணம் பறிப்பதற்காக விபத்து நடந்ததுபோல நாடகமாடி 2.5 டன் தக்காளி நிரம்பியிருந்த லாரியைக் கடத்திச் சென்ற தம்பதியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூரைச் சேர்ந்த அத்தம்பதி நெடுஞ்சாலைக் கொள்ளையர் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை கூறியது.
சித்திரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த மல்லேஷ் ஒரு விவசாயி. ஜூலை 8ஆம் தேதி சித்திரதுர்கா பகுதியில் இருந்து 2.5 டன் தக்காளியை கோலாருக்கு லாரியில் ஏற்றிச் சென்றார். லாரியில் இருந்த தக்காளியின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 2.5 லட்சம் ரூபாய். சிக்கஜாலா எனும் இடத்தில் அந்த லாரி தங்கள் காரில் மோதியதாகக் கூறி கொள்ளைக் கும்பல் ஒன்று பணம் கேட்டது. ஆனால் மல்லேஷ் பணம் தர மறுத்தார்.
எனவே அவரைத் தாக்கிய அக்கும்பல், லாரியில் இருந்து மல்லேஷைக் கீழே தள்ளியது. பின்னர் அக்கும்பலைச் சேர்ந்தோர் அந்த லாரியை ஓட்டிச் சென்றனர். மல்லேஷ் காவல்துறையிடம் புகாரளித்தார். அதன் அடிப்படையில் லாரியின் நடமாட்டத்தைக் கண்காணித்த காவல்துறை கொள்ளைக் கும்பலை அடையாளம் கண்டது.
சம்பவம் தொடர்பில் பாஸ்கர் எனும் ஆடவரும் அவரது மனைவி சிந்துஜாவும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மற்றவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.