ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் முதன்முதலாக நூர் ஷெகாவத் என்பவருக்கு மூன்றாம் பாலினத்தவர் என்ற பிறப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. ஆண் என்று குறிப்பிடப்பட்ட பழைய சான்றிதழுக்குப் பதிலாக அவர் புதிய சான்றிதழைப் பெற்றார்.
“இனி பிறப்புச் சான்றிதழ்களில் ஆண், பெண் என இருப்பது போல், 3ஆம் பாலினத்தவர் என்பதைக் குறிப்பிடுவதற்கு வசதி செய்யப்படும்,” என்று ராஜஸ்தானின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை இணைச் செயலர் மற்றும் இயக்குநர் பன்வாரி லால் தெரிவித்துள்ளார்.
“நான் யார் என்பதை உலகிற்கு உணர்த்தும் உண்மையான பாலின அடையாளம்தான் இது. இந்த பிறப்புச் சான்றிதழைக் கையில் பெறும்போது நான் மறுபடியும் இவ்வுலகில் பிறந்ததாக உணர்கிறேன்,” என்று நூர் ஷெகாவத் பெருமையுடன் மகிழ்ச்சிபொங்கக் கூறினார். இவர் இப்போது, மூன்றாம் பாலினத்தவரின் நலனுக்காக தொண்டூழிய அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்.


