லடாக்: பாகிஸ்தான் ராணுவத்தினர் 1999ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் பகுதியில் ஊடுருவி அதனை ஆக்கிரமித்தனர்.
அதனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. சவால்கள் நிறைந்த இந்தப் போரில், 1999 ஜூலை 26ஆம் தேதி, கார்கில் பகுதியை மீண்டும் கைப்பற்றி, அங்கு இந்திய தேசியக் கொடியை இந்திய ராணுவ வீரர்கள் நாட்டினர்.
இந்தியத் தரப்பில் 543 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் தரப்பிலும் பலர் மாண்டனர். கார்கில் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக, ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதியை கார்கில் வெற்றி நாள் என்று இந்தியா அனுசரிக்கிறது. போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக மௌன அஞ்சலி செலுத்தப்படும்.
இவ்வாண்டு கார்கில் வெற்றி தினமான புதன்கிழமை, லடாக்கின் திராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவகத்தில் முப்படைகளின் தளபதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ‘சீத்தல்’ ரக ஹெலிகாப்டர்கள் போர் நினைவகத்தின்மீது மலர்களைத் தூவின.