புதுடெல்லி: கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மனதுக்கு வேதனை அளிக்கிறது. நான் ஓர் இந்தியன் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்படுகிறேன் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
மணிப்பூரில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இரு பெண்களை மாற்று சமூகத்தினர் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் நாட்டு மக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான காம்பீர், “மணிப்பூர் சம்பவம் மிகவும் வெட்கக்கேடானது. இது மணிப்பூர் மாநிலத்தை மட்டும் சேர்ந்த பிரச்சினையன்று. ஒட்டுமொத்த தேசத்துக்கும் தலைக்குனிவு தரக்கூடியது.
“அதனால் ஓர் இந்தியன் என்று சொல்லிக்கொள்ளவே நான் வெட்கப்படுகிறேன். இதில் அரசியல் கூடாது. இந்தச் சம்பவம் போல் எதிர்காலத்தில் எந்த மாநிலத்திலும் நடக்கக்கூடாது,” எனத் தெரிவித்துள்ளார்.