துப்புரவுப் பெண்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.10 கோடி பரிசு

1 mins read
123a665e-ec4c-4f4d-9c79-1fcae1220fac
11 குடும்பஸ்ரீ உறுப்பினர்கள் கூட்டாக சேர்ந்து வாங்கிய ரூ.250 மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டுக்கு ரூ10 கோடி பரிசு கிடைத்துள்ளது. - படம்: தமிழ் முரசு

மலப்புரம்: கேரள மாநிலத்தில் 11 குடும்பஸ்ரீ உறுப்பினர்கள் கூட்டாக சேர்ந்து ரூ.250 மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வாங்கியுள்ளனர். அவர்கள் தற்போது அந்த டிக்கெட்டில் ரூ.10 கோடியைப் பரிசாக வென்றுள்ளனர்.

கேரள மாநிலத்தில் வறுமை ஒழிப்பு மற்றும் பெண்கள் மேம்பாடு சார்ந்து அமல்படுத்தப்பட்ட குடும்பஸ்ரீ மிஷனின் ஒரு பகுதியாக மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பரப்பனங்காடி நகராட்சியில் 11 பெண்கள் ஹரிதா கர்மா சேனாவில் பணியாற்றி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள வீடு தேடி சென்று மக்காத குப்பைகளை சேகரிப்பதுதான் இவர்களது பணி.

11 பேரும் வறியவர்கள். அதனால் 11 பேரும் இணைந்து 250 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளனர். தங்களது அதிர்ஷ்டத்தை சோதிக்கும் வகையில் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்குப் பரிசு கிடைத்துள்ளது. அதன் மூலம் அவர்கள் ரூ.10 கோடி வென்றுள்ளனர். இந்த டிக்கெட் அந்த மாநில அரசின் மழைக்கால பம்பர் லாட்டரி.

அவர்கள் வாங்கிய டிக்கெட் தற்போது பரப்பனங்காடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகையில் வரி மற்றும் முகவருக்கு சேர வேண்டிய கமிஷன் போக மீதமுள்ள தொகை 11 பேர் அடங்கிய குழுவை சேர்ந்த ஒருவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்