பெங்களூரு: பெங்களூரைச் சேர்ந்த இந்திய அறிவியல் கழகமும் ஜப்பானின் நீகத்தா பல்கலைக்கழகமும் இணைந்து இமயமலையின் உச்சியில் ஆய்வு நடத்திவருகின்றன. ஆய்வாளர்கள் இமயமலையின் உச்சியில் உள்ள படிமங்களை ஆய்வு செய்தபோது, அவற்றில் ஒன்றில் நீர்த் துளி சேமிக்கப்பட்டு இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
அந்த நீர்த் துளி, 60 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த இடத்தில் 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் இருந்திருக்கக்கூடும், அந்தக் கடலின் நீர்த் துளியாக அது இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
“பழைமையான கடலின் ஆண்டைக் கண்டுபிடித்துள்ளோம். ஆனால், அந்தக் கடலின் தன்மை குறித்து அதிக விவரங்கள் தெரியவில்லை. தற்போது இருக்கும் கடல்களுக்கும் அப்போதைய கடலுக்கும் இடையிலான வேற்றுமை மற்றும் ஒற்றுமை குறித்த விவரங்கள் முழுமையாகக் கிடைத்தால், அது புவியின் காலநிலை வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும்,” என்று இந்திய அறிவியல் கழகப் புவி அறிவியல் நிலையம் கூறியுள்ளது.

