விஜய் சேதுபதியைத் துரத்தும் வில்லன் வேடம்
விஜய் சேதுபதி ‘மகாராஜா’ என்ற தன் 50வது படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இருப்பினும், முன்னணி இயக்குநர்கள் அவரை அடுத்தடுத்து நாயகனாக நடிக்கவைக்க முன் வராததால் உச்சத்தில் இருக்கும் வில்லன் வாய்ப்புகளை விட்டுவிடக் கூடாது என்பதற்காக கார்த்தி நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் சில இளவட்ட நாயகன்களின் படங்களிலும் அவரை வில்லனாக நடிக்கவைக்க அவரைத் துரத்தி வருகின்றனர்.
ஆகஸ்ட் 4ல் மீண்டும் வெளியீடாகும் சுப்ரமணியபுரம்
கடந்த 2008ல் சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் சுப்ரமணியபுரம். இப்படம் வெளியீடாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் தமிழகம் முழுவதும் வெளியீடாக இருப்பதாக நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். “வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று தமிழகத் திரையரங்குகளில் ‘சுப்ரமணியபுரம்’ மீண்டும் வெளியிடப்படும். அந்த அனுபவத்தை மீண்டும் ஒருமுறை பெறுங்கள்,’’ என இயக்குநர் சசிகுமார் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
‘நண்பன் ஒருவன் வந்தபிறகு’
வெங்கட் பிரபு தயாரிக்கும் புதிய படத்துக்கு ‘நண்பன் ஒருவன் வந்தபிறகு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் பவானிஸ்ரீ, ஆர்ஜே விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர், தற்போது விஜய் 68 படத்துக்கான கதை தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ‘லியோ’ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு இப்படத்துக்கான பணிகள் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
வேட்டையன் ராஜா தோற்றத்துடன் ராகவா லாரன்ஸ்
நேற்று வெளியான ‘சந்திரமுகி 2’ படத்தின் முதல் சுவரொட்டியில் வேட்டையன் ராஜாவாக ராகவா லாரன்ஸ் தோன்றுகிறார். ‘சந்திரமுகி’ முதல் பாகத்தில் வேட்டையன் ராஜா என்ற பாத்திரத்தில் ரஜினிகாந்த் சில நிமிடங்கள் மட்டும் வருவார். ஆனால் இந்தப் படத்தில் படம் முழுவதும் வேட்டையன் ராஜா பாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்தப் படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்பட உள்ளது.

