திருவனந்தபுரம்: திருச்சியில் இருந்து ஷார்ஜா நோக்கிச் சென்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருவனந்தபுரத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று திங்கட்கிழமை காலை திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்டது. அந்த விமானத்தில் 154 பயணிகள் இருந்தனர்.
இந்நிலையில், நண்பகல் 12.03 மணியளவில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்றும் அதன் காரணமாக விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்றும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.